நாட்டிலேயே மிகப்பெரிய கடற்கரையாக உள்ள சென்னை மெரினாவில் வரும் காலத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தலங்களின் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி சென்னை வாசிகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றும் கூட. கடற்கரையை ரசிக்காதவர்கள் சென்னையில் இருக்கவே முடியாது. பல லட்சம் பேர் வருகை தரும் மெரினாவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
மெரினா கடற்கரையில் 3.5 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் சேவையை தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கடலோர ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்னர் விரைவில் இதற்கான பணி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரோப் கார் கொண்டு வருவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதுடன் மற்றொரு போக்குவரத்து முறையாக இருக்கும். வரும் காலங்களில் இது நகரின் பிற பகுதிகளில் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் வெற்றி பெற்றால் மக்களின் வரவேற்பை பொறுத்து பிற நகரங்களில் போக்குவரத்து பயன்பாட்டிற்காக ரோப் கார் சேவை கொண்டு வரப்படும். ரோப்கார் சேவையால் சென்னையிலும் போக்குவரத்து நெரிசல் குறையும் என பிரியா தெரிவித்தார். அதுமட்டுமின்றி கடற்கரை முழுவதும் இலவச இணைய சேவை விரைவில் கொண்டுவர டெலிகாம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மிக விரைவில் இந்த சேவை நடைமுறைக்கு வர உள்ளது.