அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் ஷாங்காய் விமான நிலையத்தில் தங்கியிருந்தபோது அவமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம், அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட குடிவரவு சோதனைகள் சீனாவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் உட்பட்டே நடந்ததாக தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாவ் நிங், ” இந்தியா “அருணாசலப் பிரதேசம்” என்று அழைக்கும் பகுதியைப் பற்றி சீனாவின் நிலைப்பாட்டை மீண்டும் கூறினார். மேலும் “சாங்னான் (Zangnan) என்பது சீனாவின் பகுதி. இந்தியா சட்டவிரோதமாக அமைத்த ‘அருணாசலப் பிரதேசம்’ என்பதை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.. அந்த இந்தியப் பெண்ணுக்கு தவறாக எந்த விஷயமும் நடக்கவில்லை, குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி மற்றும் நியாயமாக நடந்தன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் “ சீன எல்லைச் சோதனை அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க சோதனைச் செயல்முறைகளை மேற்கொண்டனர். சட்ட அமலாக்கம் சார்பில்லாமல் நடந்தது; எந்த வகையிலும் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட நபரின் சட்டபூர்வ உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. அவர்மீது எந்த கட்டாய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அந்த பெண் தடுத்து வைக்கப்படவில்லை.. அவருக்கு எந்த தொந்தரவும் செய்யப்படவில்லை.. விமான நிறுவனம் அவருக்கு ஓய்வு வசதிகளையும் உணவையும் வழங்கியது. மேலும் விவரங்களுக்கு பொறுப்புடைய அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.” என்றும் கூறினார்..
என்ன நடந்தது?
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய பெண், பெம் வாங்ஜோம் தோங்க்டொக் தனது அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.. நவம்பர் 21 அன்று லண்டனிலிருந்து ஜப்பான் செல்கிற வழியில், இடை நிறுத்தத்திற்காக மூன்று மணி நேரத்திற்காக ஷாங்காயில் தங்கும் திட்டம் இருந்தது.
ஆனால், அந்த இடைநிற்றல் எதிர்பாராத விதமாக சிக்கலானதாக மாறியது. குடிவரவு அதிகாரிகள், இந்திய பாஸ்பார்ட் செல்லாது என்று கூறியதாகவும், அதற்கு தான் பிறந்த இடமாக “அருணாச்சலப் பிரதேசம்” குறிப்பிடப்பட்டிருந்ததே என்று காரணம் தெரிவித்ததாகவும் தோங்க்டொக் கூறினார். மேலும் அருணாச்சல பிரதேசம் என்பது சீனாவின் பகுதி என்றும் சீன அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவித்தார்.. சாதாரணமாக அமைய வேண்டிய விமான நிலைய இடைநிற்றல், “உளவியல் ரீதியாகக் காயம் ஏற்படுத்தும் அனுபவமாக” மாறிவிட்டது என்றும் அப்பெண் கூறியிருந்தார்..
Read More : 3-ம் உலகப் போர் முதல் ஏலியன் தொடர்பு வரை: 2026-க்கான பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்புகள்..!



