திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்யக்கோரிய வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
புதிதாக வெளியாகும் திரைப்படங்களை, ரிலீசான நாளிலேயே சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனம் செய்து வீடியோ போடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்த விமர்சனங்கள், ரசிகர்களை திரையரங்குக்கு வரமுடியாமல் தடுக்கின்றன எனவும், இதில் சிலர் பணம் வாங்கி நல்ல விமர்சனம் செய்கிறார்கள்; சிலர் பணம் தரவில்லையென பொய்யான விமர்சனம் செய்கிறார்கள் எனவும் தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இன்று நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம். நேர்மையான விமர்சனங்களைவிட, வியூஸுக்காக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்கள் என்று TFAPA (Tamil Film Active Producers Association) புகார் தெரிவிக்கிறது. இது படத்தின் ஆரம்ப வார வசூலை நேரடியாக பாதிக்கிறது என்பதால், “படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்கு விமர்சனம் தடை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி, TFAPA சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கூறும் போது, புதிய படங்கள் வெளியாகும் போது, அந்த படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையாகும் . இதில் சமூக வலைதளங்களில் பட தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது. சினிமா விமர்சனங்களை தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் ஆகும். இதனை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மனுதாரர்கள் கேட்டுள்ள நிவாரணம் ஏற்க முடியாதது. அதனை நீதிமன்றம் வழங்க முடியாது.
சினிமா தியேட்டர்களுக்கு சவாலாக ஓடிடி தளங்கள் உருவாகி உள்ளது. இதை திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தோதாக மறந்துவிட்டது போல் தோன்றுகிறது. புதிய படங்களை வீடுகளில் இருந்து தங்கள் வசதிக்கு ஏற்றபடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து கொண்டே வருகிறது.
நீதிபதிகள் குறித்து எதிர்மறையான விமர்சனம் வைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஏனெனில் சமூக வலைதளங்களில் என்னையும்(நீதிபதி) விமர்சனம் செய்வதை நீங்கள் காண முடியும் அனைத்தையும் தடுக்க முடியாது. இன்று யாராலும் எதை குறித்தும் விமர்சனம் செய்ய முடியும். இதனை கட்டுப்படுத்த இயலாது. இங்கு ஒருவரை தடுத்து நிறுத்தினால், மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து செய்வார். அப்போது என்ன செய்ய முடியும் என்றார்.
இன்றைய உலகம் சமூக வலைதளங்களின் பிடியில் உள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் இருந்து தனி நபர்கள், அமைப்புகள், எந்த நாடும் தப்பிக்க இயலாது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பது சமூக வலைதள காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். மக்கள், படங்களை பார்த்த பிறகே அது குறித்து முடிவு செய்ய வேண்டும். படங்கள் குறித்து மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்யக்கூடாது ” இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.