சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ரூ.3,000 கோடி முதலீடு செய்து சிம்பு பட தயாரிப்பாளர் படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்பெல்லாம் பிரம்மாண்ட திரைப்படங்கள் வருவது அரிதிலும் அரிதாக இருந்தது. ஆனால், தற்போது பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு பிரம்மாண்டமாக திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனால், தென்னிந்திய திரையுலகம் ஹாலிவுட் தரத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதிலும் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் பல மடங்கு வசூல் சாதனை புரிந்தது. அதில், கே.ஜி.எஃப் 2, காந்தாரா ஆகிய திரைப்படங்களை தயாரித்த ஹோம்பெல் நிறுவனம் எக்கச்சக்கமாக லாபத்தை வாரி குவித்து இருந்தது. அதிலும், ரூ.100 கோடியில் எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 1000 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை புரிந்தது. அதேபோன்று காந்தாரா திரைப்படமும் வசூல் வேட்டை நடத்தியது.
அதைத்தொடர்ந்து ஹோம் பெல் நிறுவனம் இப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழில் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவும் உள்ளது. அந்த படத்தை சுதா கொங்கரா இயக்க இருக்கிறார். இது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. சிம்பு கூட இந்த நிறுவனத்தின் வெற்றியை பாராட்டும் வகையில் காந்தாரா பட குழுவினருக்கு கேக் அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஹோம் பெல் நிறுவனம் இந்த புது வருடத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பல தரமான படைப்புகளை வெளியிட இருக்கும் இந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய இருக்கிறதாம்.
ஏற்கனவே இந்த நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், தயாரிப்பாளர் அடுத்த 5 வருடங்களுக்காக மட்டும் கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்புதான் தற்போது பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. மேலும், சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இவ்வளவு தொகையை முதலீடு செய்யும் நிறுவனமாகவும் இது இருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் சலார் திரைப்படம் 200 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு வருகிறது.