பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து அமீரும் பாவனியும் விலகுகிறார்கள் என்று தகவல் வெளியான நிலையில், அதற்கு பாவனி விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர், அந்த சீசனில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சீரியல் நடிகை பாவனி ரெட்டியை காதலித்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் 2 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து அமீர் தனது காதலை மீண்டும் பிக்பாஸ் ஜோடிகள் 2 மேடையில் பாவனியிடம் தெரிவித்தபோது, அதை அவர் ஏற்க தயங்கியதுடன் சிறிது நாள் அவகாசம் வேண்டும் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இடம்பெற்ற சுற்றில், கல்யாண கொண்டாட்ட விழாவில் அமீர் பாவனிக்கு போட்டு வைத்து, தாலி கட்டி திருமணம் நடப்பது போன்று காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த எபிசோட் சின்னத்திரை ரசிகர்களிடம் ட்ரெண்டானது. இவ்வாறு காதலை ஏற்க மறுத்த பாவனியை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற அமீரின் ஆசையை விஜய் டிவி எப்படியோ நிறைவேற்றி விட்டது.

இந்நிலையில்தான், அமீரும் பாவனியும் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுகிறார்கள் என்ற தகவல் வெளியானது. இதற்கு தற்போது பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், ‘அமீர் மாஸ்டர் கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. மேடையில் பயமில்லாமல் நடனம் ஆடுவதற்கு முக்கிய காரணம் அவர் கொடுத்த பயிற்சிதான். அவருக்கு மூட்டில் கடுமையான காயம் ஏற்பட்ட போதும் லீவு எடுக்காமல் ரசிகர்களுக்காக, நடனத்தின் மீதிருந்த ஈடுபாட்டின் காரணமாகவும் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடக்கூடாது என வலியையும் பொருட்படுத்தாமல் நடனம் ஆடினார்.

அப்படிப்பட்ட சூழலில் கூட இருவரும் நிகழ்ச்சியில் இருந்து பின்வாங்காமல் இருந்தோம். ஆகையால் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியை விட்டுப் போகும் எண்ணம் இருவருக்கும் இல்லை. இனி வரும் எபிசோடுகளில் இன்னும் சிறப்பாக நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்விப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.