பிரபல நடிகரும், சீரியல் நடிகையும் எவ்வித அறிவிப்பும் இன்றி திடீரென திருமணம் செய்துக்கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டது திரைத்துறையினர், ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் ’பசங்க’ என்ற திரைப்படம் வெளியாது. விமல், வேகா, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ ராம், பக்கோடா பாண்டி ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். மேலும், அன்பு கதாபாத்திரத்தின் வழியாக குழந்தை நட்சத்திரமாக கிஷோர் அறிமுகமானார். இந்தப் படத்திற்காக சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருதையும் கிஷோர் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பசங்க படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மிலடனின் கோலி சோடா படத்தில் நடித்தார். இந்தப் படமும் அவருக்கு பெரிய வெற்றி பெற்றது.
பின்னர் கிஷோர் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் கிஷோர் திடீரென திருமணம் செய்துகொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில காலங்களாகவே கிஷோர் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவரும் ப்ரீத்தி ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்கள் முன்புதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலை வெளிப்படுத்தினார் நடிகர் கிஷோர். இந்தத் தகவலைப் பகிர்ந்த சில தினங்களிலேயே இவர்கள் இருவரும் தங்களது வீட்டாரது சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். ப்ரீத்தி கிஷோரை விட வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நான்கு வயது மூத்தவர்.
யூடியூப் சேனல் ஒன்றிற்கு இந்தப் புதுமணத் தம்பதியினர் அளித்தப் பேட்டிக்கு பிறகுதான் திருமண விவகாரம் வெளியே தெரிந்தது. அந்த பேட்டியில், தங்களது திருமணம் தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு ப்ரீத்தி பதிலளித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து பேசிய நடிகை ப்ரீத்தி, வயது வித்தியாசம் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. எனக்கு கிஷோரைப் பிடித்திருக்கிறது அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறது. இதற்கு மேல் வயது வித்தியாசம் ஒரு பெரிய பொருட்டாக எங்களுக்குத் தெரியவில்லை என பதில் அளித்தார்.
மேலும், எங்களது திருமணம் திடீரென நடந்ததால் அதிகமானவர்களை அழைக்க முடியவில்லை. எனது தந்தை சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அவர் ஆசைப்பட்டதால் நாங்கள் இருவரும் இந்தத் திருமணத்தை அவசர அவசரமாக முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனது தந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்திருந்தால் நிச்சயமாக இந்தத் திருமணத்தை அனைவரது முன்னிலையிலும் சிறப்பாக நடத்தியிருப்போம் என நடிகை ப்ரீத்தி உருக்கத்துடன் கூறினார். இந்நிலையில், கிஷோர்-ப்ரீத்தி தம்பதியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.