ரசிகர்கள் வைத்த தொடர் கோரிக்கை மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்துள்ளது ’கோப்ரா’ படக்குழு.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து 3-வதாக இயக்கிய திரைப்படம் ’கோப்ரா’. நடிகர் விக்ரம் பல வேடங்களில் நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்படி, படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், படத்தின் நீளத்தை ரசிகர்கள் குறையாக சொல்லி வந்தனர்.

தொடர் விமர்சனங்களை தொடர்ந்து படத்தின் நீளத்தை தற்போது படக்குழு குறைத்துள்ளது. இதற்காக படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எந்தவொரு திரைப்படமும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு சினிமா அனுபவத்தை கொடுப்பதற்காகவும்தான் எடுக்கப்படுகிறது. ரசிகர்களின் திரை அனுபவத்தை அவர்கள் ரசித்து பார்க்க வேண்டும் என்பதே எந்தவொரு படக்குழுவின் நோக்கமாகவும் இருக்கும். படத்திற்காக பார்வையாளர்கள் செலவிடும் நேரத்திற்கும், அவர்கள் கொடுக்கும் டிக்கெட் பணத்திற்கும் ஏற்ப படத்தின் உள்ளடக்கம் அமைந்திருந்தால், அதுவே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்தப் படத்தின் நீளம் அதிகமிருப்பதாக ரசிகர்களாகிய நீங்கள் சொன்னது எங்கள் காதுகளுக்கும் வந்துசேர்ந்தது. அந்தவகையில் பார்வையாளர்கள், ரசிகர்கள், எங்கள் ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய அனைவரின் பரிந்துரைப்படி கோப்ரா படத்தின் நீளம் இப்போது 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய அனைத்து இடங்களிலும் இன்று மாலை முதல் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட ’கோப்ரா’ படம் திரையிடப்படும். அனைவரும் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவளிக்கவும்” என்று கூறப்பட்டுள்ளது.