தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில், துணைத்தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 20 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்..! அவைகளில் சில..
* 2009 – 2014 வரையிலான திரைப்பட விருதுகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, மேலும் இன்னும் நிலுவையில் உள்ள வருடத்திற்கான விருதுகளுக்கு குழு அமைத்து விரைவில் வழங்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது.
* திரையரங்குகளில் டிக்கெட்களை ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் மூலம் கண்காணித்து டிக்கெட் விற்பனை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* QUBE, UFO போன்ற Digital Services Provider நிறுவனங்கள் அதிகப்படியான தொகையினை தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிப்பதை பாதியாக குறைத்து வாங்கிட செய்யுமாறு தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
* அரசு மானியம் வேண்டி 2015, 16, 17 ஆண்டு விண்ணப்பித்துள்ள சிறுமுதலீட்டு திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு 7 லட்சம் மானியத் தொகையினை 8 லட்சம் சேர்த்து 15 லட்சமாக தமிழக அரசு உயர்த்தித் தர வேண்டும்.
* முன்னாள் முதல்வர் கலைஞர் சங்கத் தயாரிப்பாளர்களுக்கு பையனூரில் வழங்கிய 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.
* சிறு முதலீட்டு திரைப்படங்களை சங்கத்தின் வர்த்தக அறக்கட்டளை மூலம் ஓடிடி தளத்தில் வெளியிட்டு தயாரிப்பாளர்கள் பயனடையும் வகையில் வழிவகை செய்யப்படும்.
* திரைப்படங்களின் விமர்சனங்களை படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து 3 நாட்கள் கழித்து சமூக வலைதளங்களில் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.