”முதல் காட்சி பார்க்க வருவோர் முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கி எழுந்துவிட்டு வந்து படம் பாருங்கள்” என்று வெந்து தணிந்தது காடு இயக்குநர் கௌதம் மேனன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதம் மேனன்-சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்த நிலையில், இத்திரைப்படம் நாளை (செப்.15) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான U/A என்ற சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதோடு, படத்தின் நீளம் 2 மணிநேரம் 53 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கிறது. இதனையடுத்து படத்திற்காக புக்கிங் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 150-க்கும் மேலான தியேட்டர்களில் அதிகாலை 4.30 மற்றும் 5 மணி காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது.

இந்நிலையில், FDFS பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, “முதல் காட்சி பார்க்க வருவோர் முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கி எழுந்துவிட்டு வந்து படம் பாருங்கள், ஏனெனில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை மற்றும் கதாப்பாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்” எனக் கூறியிருக்கிறார். வெகுநாள் காத்திருப்புக்கு பின்னர் ஒருவழியாக படம் ரிலீசாக இருப்பதால் ஏற்கெனவே படத்தின் இருந்த எதிர்பார்ப்பு கவுதம் மேனனின் வேண்டுகோளுக்கு பிறகு மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.