விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அந்த கட்சியில் இணைந்து தொண்டராவேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் தனது 16 ஆவது வயதில் நடிகர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா எனும் படத்தில் நடித்திருந்தார். அப்போது விஜய்யும் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். வனிதாவும் மஞ்சுளா – விஜயகுமார் தம்பதியின் மகள் என்பதை தாண்டி அறிமுக ஹீரோயினாக இருந்தார். இதனால் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். வனிதாவுக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு இல்லாத நேரத்திலும் இவர்களுக்குள்ளான நட்பு இருந்தது. அந்த வகையில், வனிதாவின் மகன் ஸ்ரீஹரிக்கு விஜய்யை பிடிக்கும் என அவரிடம் வனிதா சொல்லியிருந்தாராம். இதனால் ஒரு நாள் ஸ்ரீஹரியின் பிறந்தநாள் அன்று திடீரென வனிதாவுக்கு போன் செய்து நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என தெரிவித்தார்.
வனிதாவும் ஏதோ கலாய்க்கிறார் என நினைத்து வாங்க என அழைத்துள்ளார். பின்னர் நிஜமாகவே வனிதா வீட்டிற்கு விஜய் வந்து ஸ்ரீஹரியுடன் விளையாடினாராம். குழந்தையை அழைத்து மடியில் உட்கார வைத்து ஏதோ ஒரு பொம்மையை வாங்கி வந்து கொடுத்து சிரித்து சிரித்து விளையாடினாராம். இதை வனிதா சிறிதும் எதிர்பார்க்கவில்லையாம். அப்போது விஜய் ஓரளவுக்கு வளர்ந்த நடிகராகவே இருந்தாராம். அப்படியிருக்கும் போது அவரிடம் இருந்த அந்த பணிவை எண்ணி மெய்சிலிர்த்து போனாராம்.
இதற்கிடையே, விஜய் அரசியலுக்கு வருவார் என அவ்வப்போது சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், நாளை பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். எனவே, விஜய் முழுவீச்சில் அரசியலில் இறங்க தயாராகி வருகிறார் என்றே தெரிகிறது. இதுகுறித்து நடிகை வனிதாவிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், விஜய் ஒரு புத்திசாலி. வருங்காலத்தை யோசித்து விஷயங்களை செய்வார். விஜய் தற்போது உச்சத்தில் இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தால் நான் அவருக்கு துணையாக நிற்பேன். அவருக்கு ஒரு தொண்டராகவும் இருப்பேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.