கிருத்திகா உதயநிதி, மெர்சி சிவா நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படம், பின் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் இயக்கியிருந்தார். இந்த தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ஜெயம் ரவியின் மார்கெட் உச்சத்தை அடைந்தாக தெரிகிறது. மேலும், கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள இந்த படம் ஜெயம்ரவிக்கு 33-வது படமாகும்.
மேலும், ஜெயம் ரவிக்கு கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார். தமிழில் ஓகே கண்மணி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நித்யா மேனன். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து இவர் மிகவும் பிரபலமாகினார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.