பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் 2-வது குற்றவாளியான ஷாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜரானார். இதனால், மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும், ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானர்.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மீரா மிதுன் எங்கு உள்ளார் என்பதை தேடி வருவதாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.