‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில், உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படமாகும். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதற்கிடையே, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் 2ஆம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரப்படி 58 – 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வெளியான ஒரு வாரத்தில் உலக அளவில் ரூபாய் 300 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் அப்போது படம் பார்க்க ரூ.399 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் அனைத்து பிரைம் சந்தாதாரர்களும் இனிமேல் இந்தப் படத்தை இலவசமாகப் பார்க்கலாம் என தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.