நயன்தாரா, ப்ரித்விராஜ் இணைந்து நடித்துள்ள ’கோல்டு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
’நேரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். கடந்த 2015ஆம் ஆண்டு அவர் இயக்கிய மலையாளத்தில் மட்டும் வெளியான ’பிரேமம்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்த நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் இப்போது முன்னணி நடிகர்களாக திகழ்கின்றனர். பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரனுக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கும் திரைப்படம் ’கோல்டு’. ப்ரித்விராஜ் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரேமம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்கள் தரப்பு வேலை தாமதத்தின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து கோல்டு திரைப்படம் வெளியாகும்” என்று தெரிவித்தார். மாநாடு, வலிமை திரைப்படத்தை வெளியிட்ட எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.