பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியே சென்றதால், அவருக்கு பதில் வேறு ஒருவரை போட்டியாளராக களமிறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் தற்போது 6-வது சீசனை எட்டி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் 21-வது போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரி கொடுத்தார். இதனால் 2-வது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக சென்றது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் முதல் வாரத்திலேயே பேமஸ் ஆனது. இதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். அவருக்காகவே இந்நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம்.
இந்நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து 2 வாரங்களிலேயே வீட்டுக்கு கிளம்பிவிட்டார். தனது மகனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை எனக்கூறி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஜிபி முத்து. அவரின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கும், சக போட்டியாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில், ஜிபி முத்து வெளியே சென்றதால் அவருக்கு பதில் வேறு ஒருவரை வைல்டு கார்டு போட்டியாளராக களமிறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் உடன் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் உள்ளே செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.