2026இல் நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளதாக மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரை போல திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு தாவ பல நடிகர்கள் முயற்சித்தனர். ஆனால், யாரும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை. இதற்கு உதாரணமாக சிவாஜி முதல் ரஜினி வரை பலரை உதாரணமாக சொல்லலாம். இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
![’விடியல் ஆட்சி’யை குறிவைக்கும் ’வாரிசு ஆட்சி’..!! 2026 தேர்தலை எதிர்கொள்ளும் நடிகர் விஜய்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Vijay-1024x575.jpeg)
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல்களில் தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள், நிர்வாகிகளை களமிறக்கி விட்டு அரசியலின் ஆழம் பார்த்தார் விஜய். அதில் சுயேட்சையாக போட்டியிட்டு பலரும் வெற்றி பெற்றனர். இது புதிய உத்வேகம் கொடுக்க தீவிரமாக மக்கள் பணியாற்ற தனது இயக்கத்தினருக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். தற்போது ஏழை, எளிய குழந்தைகளுக்கு இலவச ரொட்டி, பால் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
![’விடியல் ஆட்சி’யை குறிவைக்கும் ’வாரிசு ஆட்சி’..!! 2026 தேர்தலை எதிர்கொள்ளும் நடிகர் விஜய்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/FfqF7n4aYAEnAOE.jpg)
தற்போது விஜய் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் தீவிர அரசியலில் இறங்கி முதல்வராக வர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கனவு காணத் தொடங்கிவிட்டனர். இதனால் அவரது புதிய படங்கள் வெளியாகும் போதெல்லாம் அரசியல் நெடியுடன் கூடிய போஸ்டர்களை ஒட்டி அதகளம் செய்து வருகின்றனர். அதில் வாரிசு திரைப்படமும் விலக்கல்ல. குறிப்பாக மதுரையில் ”2021ல் விடியல் ஆட்சியை பார்த்து விட்டோம் மனமாக… 2026ல் வாரிசு ஆட்சியை பார்க்கப் போகிறோம் தரமாக” என்று அச்சிட்டு போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அதேசமயம் சமூகப் பிரச்சனைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். திரைப்பட நடிகராக பொது விஷயங்களில் கருத்து சொல்லாமல் ஒதுங்கியிருக்க முடியும். ஆனால், அரசியலில் அப்படி இருக்க முடியாது.
![’விடியல் ஆட்சி’யை குறிவைக்கும் ’வாரிசு ஆட்சி’..!! 2026 தேர்தலை எதிர்கொள்ளும் நடிகர் விஜய்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/10/Vijay_Youtube-e1542092643134.jpg)
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும். தொடர்ச்சியாக மக்கள் பணியாற்ற வேண்டும். கள அரசியல் என்பது மிகவும் அவசியம். எம்.ஜி.ஆர் முதல்வர் ஆவதற்கு முன்பு திமுகவில் இருந்தார். திராவிடக் கொள்கைகளை தொடர்ச்சியாக பேசி வந்தார். மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டார். இதேபோல் தான் விஜயகாந்த் அவர்களும் தனது ரசிகர் மன்றம் மூலம் மக்கள் பணியாற்றினார். பல ஆண்டுகள் தீவிரமாக உழைத்தார். இவர்கள் வரிசையில் நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகிறது? நடிகர் ரஜினி போல ஆசை காட்டி ஏமாற்றி விடுவாரா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.