இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜனும், சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதனும் மோதிக் கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’கட்சிக்காரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட பயில்வான் ரங்கநாதன், தன்னை தகாத வார்த்தையால் ராஜன் பேசியதாக தகராறு செய்தார். அதற்கு பதிலளித்து பேசிய ராஜன், ‘உங்களுக்கு பதில் சொல்ல நான் இங்கு வரவில்லை. உனக்கு பதில் சொல்ற இடம் இது இல்ல. வா தனியா பேட்டி வச்சுக்கலாம். ரெண்டு பேரும் பேட்டி வச்சுக்கலாம். அங்க வாங்க. இந்த மேடை தயாரிப்பாளர் போட்ட மேடை.

எல்லாமே ஓசிக்கு வேண்டாம். உன்னையப் பத்தி எப்போ பேசினேன்? நீ ஒவ்வொரு தாய்மார்களையும் கேவலப்படுத்திட்டு இருக்க. ஒவ்வொரு நடிகைகளையும் கேவலப்படுத்திட்டு இருக்க. பெட்ரூம் பத்தியே பேசுற. இந்த மிரட்டல் எல்லாம் வேற ஆளுக்கிட்ட வச்சுக்க.’ என்று பேசினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியாக அங்கிருந்தவர்கள் ரங்கநாதனை சமாதனப்படுத்தி அங்கிருந்து வெளியே அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் மேடையில் இருந்தவர்கள், ராஜனுக்கு தண்ணீர் கொடுங்கள் என்று கூற, ’எனக்கு தண்ணீர் எல்லாம் வேண்டாம். அவங்களுக்கு தண்ணீ காட்றதுதான் என் வேலை’ என்று கூறி ராஜன் பேச்சை தொடர்ந்தார். சினிமாவில் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளர் ராஜனும், பயில்வான் ரங்கநாதனும் மோதிக்கொண்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.