தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி வாகைசூடியுள்ளன. இந்நிலையில், இவர் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் வெற்றிமாறனையும், விடுதலை படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் விடுதலை படம் குறித்து ட்வீட் செய்திருந்தார். அதில், விடுதலை திரைப்படம் பிரமாதமாக இருந்ததாகவும், இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். அவர் போட்ட இந்த பதிவை நெட்டிசன்கள் வில்லங்கமாக மாற்றி உள்ளனர்.
இந்த பதிவில் இயக்குனர் வெற்றிமாறன் என்று மட்டும் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி வெற்றிமாறனை சார்னு கூப்பிட மாட்டியா.. மரியாதை கொடுக்க மாட்டியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். வெற்றிமாறன் சீனியர் இயக்குனர் மட்டுமல்ல இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனரும் கூட அவரை சார்னு தான் கூப்பிடனும் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி நெகடிவ் கமெண்ட்டுகள் குவிந்து வந்தாலும், பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.