பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளும், நடிகையுமான கனகாவின் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரகாட்டக்காரன், அதிசய பிறவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கனகா. இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 1-வது மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் இவரது வீட்டில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து கனகா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்புப்படை வீரர்கள் உடனடியாக வீட்டில் துணிகளில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றும் போது தீப்பிடித்து, துணிகளில் தீ பரவியது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.