விஜய்-எஸ்.ஏ.சி இடையேயான விரிசல் குறித்து பயில்வான் ரங்கநாதன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் முன்னேற்றத்திற்கும், அவரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவராக அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திகழ்கிறார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் விஜய்யின் முகத்தை மக்களின் மனதில் பதிய வைக்க எஸ்.ஏ.சி எடுத்த முயற்சி அளப்பரியது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே விஜய்க்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசைவந்துவிட்டது. 10ஆம் வகுப்பு முடித்த பிறகு “சினிமாவில் ஹீரோவாக நடிக்கப்போகிறேன்” என எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூறினார் விஜய். ஆனால், எஸ்.ஏ.சியோ விஜய்யிடம் கல்லூரி படிப்பு முடித்தப் பிறகுதான் சினிமா என கண்டிப்போடு கூறிவிட்டார். மேலும் விஜய்யை ஹீரோ ஆக்க வேண்டும் என எஸ்.ஏ.சி நினைக்கவில்லையாம். அவரை ஒரு அரசு அதிகாரியாகத்தான் பார்க்க வேண்டும் என எஸ்.ஏ.சி நினைத்தாராம்.
விஜய் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தனது தந்தை எஸ்.ஏ.சியிடம் “என்னை எப்போ ஹீரோவா வைத்து படம் எடுக்கப்போறீங்க?” என விஜய் கேட்டுக்கொண்டே இருப்பாராம். இந்த நிலையில்தான் எஸ்.ஏ.சி. விஜய்யை ஹீரோவாக வைத்து “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தை தயாரித்தார். ஆனால் அத்திரைப்படம் படுதோல்வியடைந்ததால் எஸ்.ஏ.சி. மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டார். எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படம் விஜயகாந்த்தின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையான திரைப்படம் என்பதால் எஸ்.ஏ.சியின் மீது அவருக்கு ஒரு தனி மரியாதை உண்டு.
ஒரு நாள் விஜயகாந்த்தை அழைத்த எஸ்.ஏ.சி, “நீங்கள் விஜய்யுடன் ஒரு திரைப்படத்தில் நடித்தால் விஜய்க்கு ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும்” என கேட்டுக்கொண்டார். இதனை கேட்ட விஜயகாந்த் உடனே ஒப்புக்கொண்டாராம். அவ்வாறு எஸ்.ஏ.சி. இயக்கிய திரைப்படம்தான் “செந்தூரபாண்டி”. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லையாம். விஜயகாந்திற்கு எஸ்.ஏ.சி. எப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தாரோ, அதேபோல் விஜய்க்கு விஜயகாந்த் திருப்புமுனையாக அமைந்தார். “செந்தூரபாண்டி” திரைப்படத்திற்கு பிறகு விஜய்யின் முகத்தை ரசிகர்கள் தங்களது மனதில் ஆழமாக பதித்துக்கொண்டனர்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து எஸ்.ஏ.சி விஜய்யை வைத்து பல திரைப்படங்களை இயக்கினார். இவ்வாறு விஜய்யின் வளர்ச்சிக்கு அவரது தந்தை மிகப்பெரிய பங்கை அளித்திருந்தார். விஜய்யின் அசூர வளர்ச்சிக்கு பின்பும் விஜய்க்கு வரும் கதைகளை தேர்தெடுக்கும் பொறுப்பை எஸ்.ஏ.சி. ஏற்றார். இவ்வாறு மிகவும் இணக்கமாக இருந்த தந்தை-மகன் ஆகியோருக்கு இடையே சமீப காலமாக விரிசல் விழுந்ததாக பேச்சுக்கள் அடிப்பட்டன. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், விஜய்-எஸ்.ஏ.சி விவகாரத்தின் பின்னணி குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
“விஜய்க்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் தற்போது இல்லை. ஆனால் எஸ்.ஏ.சி, விஜய்யின் நற்பணி மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்ற முயன்றார். இங்குதான் இருவருக்குள்ளும் பிரச்சனையே வெடித்தது. கடந்த சில வருடங்களாக இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தைகளே இல்லை. ஆனால் இருவரையும் சேர்த்து வைக்க விஜய்யின் மாமனார் பஞ்சாயத்து பேசி வருகிறார்” என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்க்கு தனது தந்தை மீது தான் கோபமே தவிர, தனது தாயாரை நன்றாக கவனித்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.