மகளிர் உரிமைத்தொகை 1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்கள், 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். மேலும், ரேஷன் கடை பணியாளர், வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும் எனவும், விண்ணப்பப் பதிவின் போது கடவுச்சொல் அனுப்பப்படும் என்பதால், தங்களது செல்போனையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை அளிக்கும் போது ஆதார், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின்சார கட்டண ரசீது ஆகியவற்றை அசலாக எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்பதிவு முகாம்களை காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்த வேண்டும் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்ய விரும்பினால் 30 நாட்களுக்குள் இணைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சொந்த பயன்பாட்டுக்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.