சாப்பிட்ட பிறகு வயிறு லேசாக உப்புசம், நாள் முழுவதும் சோர்வு, “ஏதோ சரியில்லை” என்ற தெளிவற்ற உணர்வு போன்றவை பெரும்பாலும் சாதாரண பிரச்சனைகளாகவே கருதப்படுகின்றன. ஆனால், இவை சில நேரங்களில் பெருங்குடல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்எஸ்ஓ புற்றுநோய் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். நிலேஷ் சோர்டியா, கூறுகையில், “இந்த நுட்பமான அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. அவை பாதிப்பில்லாதவை போல் தோன்றினாலும், கடுமையான இரைப்பை மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்” என்றார்.
மேலும், வயிறு உப்புசம், சோர்வு போன்றவை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். “அறிகுறி எப்போதெல்லாம் வருகிறது, அது மோசமாகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். சுமார் 60 சதவீத நோயாளிகள் ஆரம்பத்தில் செரிமான பிரச்சனைகளை அலட்சியம் செய்கிறார்கள்,” எனவும் தெரிவித்தார்.
அடிக்கடி ஏற்படும் வயிறு உப்புசம், சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு, காரணமற்ற எடை இழப்பு, தொடர்ச்சியான சோர்வு, குடல் பழக்கங்களில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பலர் வீட்டு வைத்தியம் அல்லது மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்தி வாரக்கணக்கில் தாமதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதுவே நோய் கண்டறிதலை தாமதப்படுத்துகிறது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை பலன் அதிகமாக இருக்கும். ஆனால் பெருங்குடல், வயிறு, கல்லீரல் போன்ற புற்றுநோய்கள் பெரும்பாலும் பிற்கட்டங்களில் தான் கண்டறியப்படுகின்றன,” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், “ஒவ்வொரு வயிறு உப்புசமும் புற்றுநோயாகிவிடும் என்றில்லை. ஆனால் உடல் தரும் எச்சரிக்கைகளை கவனித்து, அறிகுறிகள் நீடித்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்,” எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Read more: டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்தார்; மேற்கு வங்கத் தேர்தலில் போட்டி..?



