இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்துள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 4000-ஐ தாண்டியது… ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இந்த நிலையில் இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.. கொரோனா காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091ல் இருந்து 25,567 அதிகரித்துள்ளது..
தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.75% ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,826 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.. இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,82,538 ஆக அதிகரித்துள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 3.32 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.89 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன..