இளைஞர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அரிம்பூர் பகுதியில் நிதின் மற்றும் மனு ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் வங்கிக் கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைத்து நிதின் மற்றும் மனு ஆகியோர் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். அதோடு ஐஃபோன் வாங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், மற்ற வங்கிகளில் கணக்கு திறந்து பணத்தை டெபாசிட் செய்தல் என பல வழிகளில் பணத்தை செலவு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனதை தெரிந்து கொண்ட வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நிதின் மற்றும் மனு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. மேலும், இளைஞர்கள் இருவரும் 2 கோடியே 44 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளது விசாரணையில் அம்பலமானது. இதற்கிடையே, இருவரும் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.