கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளை மூடுமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) டெல்லி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சில பெற்றோர்கள் டெல்லி அரசை வலியுறுத்தியுள்ளனர். பள்ளிகளை மூடுவது குழந்தைகளுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என்று ஒரு தரப்பு பெற்றோர் கூறி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது என்றும் தற்போது பொதுத்தேர்வுகள் நெருங்கி வருகிறதுச் எனவும் பெற்றோர் கூறுகின்றனர்.

ஆனால், காற்று மாசு அதிகரித்து காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், குழந்தைகளால் சுவாசிக்க முடியாது என்றும், குறைந்த பட்சம் அவர்கள் பள்ளி நேரத்தை தாமதப்படுத்தலாம் என்பது மற்றொரு தரப்பு பெற்றோரின் கருத்தாக உள்ளது. பொதுத்தேர்வு இருக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு வரலாம் என்றும், மற்ற மாணவர்கள் வீட்டில் தங்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் பரிந்துரைத்தனர். இதனால், டெல்லி அரசு என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.