மதுரையில் தவெக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை ‘கட் அவுட்’ வடிவில் விஜய் வழங்கியது இணையத்தில் வைரலாகிறது.
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்..
சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்காமல், அவரை பார்க்க வரவழைப்பது என்ன மாதிரியான அரசியல் என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறிய பின்பு தான் தவெக மீண்டும் செயல்பட தொடங்கியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை புதிதாக நிர்வாக குழு நியமனம், சிறப்புப் பொதுக்குழு கூட்டம், மீண்டும் திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். SIR பணிகள் குறித்தும் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார். சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியீடும் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கட் அவுட் வடிவில் கலந்து கொண்டது பேசுபொருளானது.
இதில் பெரிய சுவாரசியம் என்னவென்றால் கட் அவுட் வடிவில் இருந்த விஜய் தான், புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்குகிறார். கட் அவுட் வடிவில் இருந்த விஜயுடன் குரூப் போட்டோ எடுத்து உறுப்பினர்கள் மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையான நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் கட்டவுட் மூலமாக அடையாள அட்டை வழங்கியது TVK மட்டுமே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.



