9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 62 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் இருக்கும் ஏரவாடி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அதே பகுதியில் பலகார கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் பலகாரம் வாங்க வந்துள்ளார். அப்போது, அந்த மாணவியை கடைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். ஆனாலும், அந்த சிறுமி, வீட்டிற்கு சென்றதும் தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்தவற்றை சொல்லியிருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், பாபநாசம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் நாகராஜனை கைது செய்த பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார், அவரை தஞ்சாவூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நாகராஜனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு வழங்கினார்.