உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கமலா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் சைன்யா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஜிம் ட்ரெய்னராக இருந்த அந்த இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். கணவரை இழந்த அப்பெண் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவரை இழந்த அந்த பெண் தனது மாமனார் வீட்டில் சொத்தில் பங்கு கொடுங்கள் எனக் கேட்கத் தொடங்கினார். இதற்கு மனமில்லாத கணவர் வீட்டார் அதிரடி முடிவை எடுத்தனர்.
தனது ஒரே பிள்ளையும் இறந்துவிட்டதால் வாரிசு இல்லாமல் போகக் கூடாது என்ற எண்ணத்துடமும், மருமகளுக்கு சொத்து போகக் கூடாது என்பதாலும் பெண்ணின் மாமியார் தனது 58 வயதில் கர்ப்பம் தரித்து ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். 5 மாத குழந்தை தற்போது பெண்ணின் மாமியாருக்கு உள்ளது. தனக்கு சொத்து கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் மாமியார் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என கணவரை இழந்த அப்பெண் குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட அலுவலர்கள் வழக்கில் சுமூக தீர்வு எட்ட முயற்சி செய்து வருகின்றனர். இரு தரப்பும் விடாபிடியாக உள்ள நிலையில், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.