தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை பள்ளிக்கல்வித்துறை கட்டாயமாக்கி உள்ளது எனவும், அனைத்து தனியார் பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த 2015இல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி மீண்டும் அரசு உத்தரவிட்டிருந்தது.ச்
மேலும், 2015இல் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் ஆண்டு ரீதியாக தமிழ் பாடத்தை கற்று வரவேண்டும் என்கிற ரீதியில் அந்த உத்தரவானது வெளியிடப்பட்டது. தற்போது, அவர்கள் பத்தாம் வகுப்பை எட்டி உள்ள நிலையில், இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வில் அனைத்து தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தமிழ் பாடத்தை எழுத வேண்டும் என்றும் அவர்களுக்கென தனியார் பள்ளிகள் முறையான பாடத்திட்டத்தை தயார் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு 2023 – 2024 சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை கல்வி முறையிலும் பயின்று வரும் மாணவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.