அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் வயதான பெண் ஒருவரும் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த நிதி நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கும் சங்கர் மிஸ்ரா என்ற நபர் மதுபோதையில் அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அந்த விமான நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்தபோதும் பணியில் இருந்த ஏர் இந்தியா பிரச்சினையை சரிசெய்வதிலேயே குறியாக இருந்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அந்த பெண் டெல்லிக்கு வந்த பின் ஆன்லைன் மூலம் தனது புகாரை ஏர் இந்தியா தலைமைக்கு அனுப்பியுள்ளார். ஆனாலும், சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்த விஷயம் வெளி உலகிற்கு தெரியவந்த பிறகுதான், சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா 30 நாட்கள் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்தது. சங்கர் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ரா டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.