வாகன ஓட்டிகள் அனைவரும் வரும் 10-ம் தேதிக்குள் சாலை வரியை செலுத்த வேண்டும் என தர்மபுரி போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
2023-2024 -ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான சாலை வரி வசூல் சிறப்பு 10.04.2023 வரை வட்டார போக்குவரத்து அலுவலகம், தருமபுரி மற்றும் இவ்வலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் அரூர், பாலக்கோடு ஆகிய அலுவலகங்களில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இச்சிறப்பு முகாம் மேற்கண்ட நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அலுவலக வேலை நாட்களில் நடைபெறும். எனவே, ஆண்டு வரி செலுத்தக்கூடிய கார் , ஜே.சி.பி, கிரேன் டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் வாகன உரிமையாளர்கள் இச்சிறப்பு முகாமை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியினை செலுத்த வேண்டும்.
2023-2024 -ம் நிதியாண்டிற்கான சாலை வரியினை 10.04.2023 -க்குள் அபராதம் ஏதும் இன்றி வாகன உரிமையாளர்கள் செலுத்தலாம். தவறும்பட்சத்தில் உரிய அபராதத்துடன் செலுத்த நேரிடும். சாலை வரி செலுத்த வரும் வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, பசுமைவரி மற்றும் புகைச்சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து உரிய தெளிவுரை பெற்றுக்கொண்டு இணையதளம் மூலம் வரியை செலுத்த வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.