பெங்களூரு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக நம்ப வைத்து, பெண் பயணியை பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஊழியரை ரயில்வே நிர்வாகம் உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் நுவாபடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இரண்டு உறவினர்களுடன் வேலை தேடி பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த புதன்கிழமை திட்லாகர் பகுதியில் இருந்து ரயிலில் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
பயணத்தின் போது தவறுதலாக வேறு ரயிலில் ஏறியதால், மூவரும் ஹட்டியா சென்றடைந்தனர். பின்னர் தவறை உணர்ந்த அவர்கள், மாற்று ரயில் மூலம் ரூர்கேலா ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது பெங்களூரு செல்லும் பயணத்துக்கான முன்பதிவு உறுதி செய்யப்படாததால், அந்தப் பெண்ணின் இரண்டு உறவினர்களும் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டருக்குச் சென்றனர். பெண் மட்டும் நடைமேடையில் தனியாக காத்திருந்தார்.
அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர், பெங்களூரு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டை பெற்றுத் தருவதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். பின்னர் அவரை நடைமேடையில் இருந்த ஓய்வறைக்கு அழைத்துச் சென்று, கதவை உள்பக்கமாக பூட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் தெரிவிக்கக்கூடாது என மிரட்டி அந்தப் பெண்ணிடம் ரூ.2,000 கொடுத்துள்ளார்.
அங்கிருந்து தப்பித்து வெளியே வந்த பெண், தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் அரசு ரயில்வே போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஊழியர் மீது ரயில்வே நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. சக்ரதார்பூர் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் ஆதித்ய சவுத்ரி அளித்த தகவலின்படி, அந்த ஊழியர் எந்தவித ஓய்வூதியப் பலன்களும் கிடைக்காத வகையில் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரயில் நிலையம் போன்ற பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பயணிகளை ஏமாற்றும் சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: அதிர்ச்சி! ராணுவ முகாமில் பயங்கர வெடிவிபத்து.. 10 பேர் பலி; 60-க்கும் மேற்பட்டோர் காயம்!



