தம்பியுடன் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தனது மனைவி, 11 வயது மகள் மற்றும் மகனுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது அந்த 11 வயது சிறுமி தனது தம்பியுடன் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றிருக்கிறார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த போதை ஆசாமி இளைஞர், அந்த சிறுமியின் கையை பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், பயந்துபோன சிறுமி அலறி இருக்கிறார். இதையடுத்து, அந்த இளைஞரும் தப்பியோட முயன்றிருக்கிறார். ஆனால், அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையறிந்த 11 வயது சிறுமியின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், அவரது பெயர் ஜெகதீஷ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.