சென்னை எர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (27). இவர் டிகிரி முடித்து விட்டு ஆவடி அருகே ப்யூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்து, ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் பயணம் செய்து விம்கோநகர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது, தனது செல்போன் மூலம் யாரிடமோ பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில், அங்கு வந்த விரைவு ரயில் ஷாலினி மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரயில் தண்டவாளம் அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதற்கிடையே, நீண்ட நேரமாகியும் ஷாலினி வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் விம்கோ ரயில் நிலையம் அருகே தேடிப்பார்த்துள்ளனர்.
![மக்களே கவனம்..!! செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றதால் விபரீதம்..!! இளம்பெண் உயிருக்கு போராடி பலி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-16-at-2.28.31-PM.jpeg)
அப்போது, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாலினியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். பின்னர், அங்கு வைத்து ஷாலினியை பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை தினத்தில் இளம்பெண் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.