ஆத்தூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் பெண்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கர்ப்பிணிகள் அதிகமாக தனியார் மருத்துவமனையே நாடி செல்வது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவும், அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆத்தூர் அருகே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
![ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை..!! முன்னுதாரணமாக திகழ்ந்த மருத்துவர்..!! குவியும் பாராட்டு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/faacfcfb28.jpg)
சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா (31). இவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த மருத்துவர் புகழ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருந்த ஹர்ஷிதா தான் பணியாற்றும் மருத்துவமனையிலேயே தொடர்ந்து பரிசோதனை சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், தான் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 21ஆம் தேதி சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.