கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கடுகனூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்த் (41). இவரது மனைவி ராஜேஸ்வரி (31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள குட்டையில் லட்சுமிகாந்த் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், லட்சுமி காந்த் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும், கனகம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த உதயசூரியன் (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் லட்சுமிகாந்த் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி, உதயசூரியன், அவரது நண்பர் பாண்டியன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக ராஜேஸ்வரி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நான் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தேன். அந்த கம்பெனியில் மேற்பார்வையாளராக உதயசூரியன் வேலை செய்து வந்தார். அவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி நாங்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம். எனது நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் என்னை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார். இதனையடுத்து, கணவரை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தேன் அதன்படி கணவருக்கு உதயசூரியனை அறிமுகப்படுத்தியுள்ளார். அவ்வப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்நிலையில், உதயசூரியன் அவரது நண்பரான பாண்டியன் என்பவருடன் சேர்ந்து லட்சுமிகாந்தை மது குடிக்க அழைத்துச் சென்றனர். அவருக்கு மது போதை தலைக்கு ஏறியதும் இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். அவரது கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தி விட்டு உடலை குட்டையில் வீசிவிட்டு வந்து விட்டனர்” என தெரிவித்தார்.