பெற்றோரின் எதிர்ப்பால் பேச மறுத்த காதலியின் முகத்தை கத்தியால் கீறிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மயிலாப்பூரை சேர்ந்த மாணவி (21), பள்ளியில் படிக்கும்போது ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (19) என்பவரை காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், மாணவியை கண்டித்துள்ளனர். இதனால், வீட்டிற்கு பயந்து காதலன் பிரசாந்திடம் பேசுவதை மாணவி நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், அந்த மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரசாந்த், மாணவியிடம் எதற்காக என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.
![பெற்றோரின் எதிர்ப்பால் பேச மறுத்த காதலி..! முகத்தில் கத்தியால் வெட்டிய காதலன்..! பரபரப்பு](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/Arrest.jpg)
இதற்கு சரியாக பதிலளிக்காத மாணவியை, தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து முகத்தில் கீறிவிட்டு தப்பிச் சென்றார். இதில் ரத்த காயமடைந்த மாணவி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாந்த் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.