கணவரை மது போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிய மனைவியை, கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை சூரப்பட்டு அன்னை நகரில் வசித்து வருபவர்கள் வேலாயுதம் – ரேவதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வேலாயுதம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலாயுதத்தை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் அவரது மனைவி ரேவதி சேர்த்துள்ளா. அங்கு சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மீண்டும் மதுவுக்கு அடிமையான வேலாயுதம், குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மது போதை மறுவாழ்வு மையத்தில் தன்னை சேர்த்ததற்கு பழிவாங்குவதாக கூறி தனது மனைவியை சரமாரியாக தாக்கி சுவரில் தள்ளி உள்ளார். இதில், ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கணவர் வேலாயுதத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.