அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களுக்கு மழை வெளுத்து வாங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. பருவ மழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் மிக கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை முதல் 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். எனவே நாளை முதல் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.