ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த மென்பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உப்பிலி பாளையம் அருகே ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் சங்கர் (29). இவர், சென்னையில் என்ஜினீயராக வேலை செய்து வந்த நிலையில், கடந்த வாரம் தனது வேலையை ரிசைன் செய்துவிட்டு கோவை திரும்பியுள்ளார். சங்கருக்கு பல மாதங்களாக ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில், கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால், கடன் தொல்லையால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ஹோட்டல் ஒன்றிற்கு சென்ற சங்கர், அங்கிருந்த மேலாளரிடம் மீட்டிங் நடத்த அறை வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து, மேலாளர் சிவதாசன் அறை ஒன்றை ஒதுக்கி கொடுத்துள்ளார். பின்னர், அந்த அறையின் சாவியை பெற்றுக்கொண்டு சென்ற சங்கர், அடுத்த நாள் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மேலாளர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அறையின் கதவை மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தனர்.

அப்போது அந்த அறையில் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து, சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அந்த ஹோட்டல் மேலாளர் சிவதாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சங்கர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்த போது, அவர் எழுதிய ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும், அதிக அளவு கடன் உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.