சேலம் அருகே 21 வயது இளம்பெண் ஒருவர், 17 வயது சிறுவனை மயக்கி, ஊரைவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வெள்ளிப் பட்டறையில் 17 வயது சிறுவன் ஒருவர் வேலை பார்த்து வருகிறான். இவன், வழக்கம்போல வேலைக்குச் சென்ற நிலையில், இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். போன் செய்து பார்த்தபோது சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவன் மாயமானது குறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இதுகுறித்து விசாரிக்கையில், அந்த சிறுவன் வேலை பார்த்து வந்த அதே வெள்ளி பட்டறையில் 21 வயது இளம்பெண்ணும் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அதே நாளில் அந்த பெண்ணும் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
இது போலீசாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அந்தப் பெண்ணின் கணவரும் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று தேடி வந்துள்ளார். பின்னர், எங்கு தேடியும் கிடைக்காததால் அவரும் காவல்நிலையத்தை நாடியுள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அந்த சிறுவனும் இளம்பெண்ணும் ஊரை விட்டு ஓடிவிட்டது தெரியவந்தது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.