அரசு மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இலுப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சஞ்சீவ் நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ஆசிக் அசன் முகமது. இவர், முக்கணாமலைப்பட்டி அரசு மருத்துமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு இவரின் சகோதரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை பார்ப்பதற்காக குடும்பத்தோடு புதுக்கோட்டை சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை மருத்துவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பத்தினர், தொலைபேசி மூலம் மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த மருத்துவர் ஆசிப் அசன் முகமது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலுப்பூர் காவல்நிலைய போலீசார், மோப்பநாய் தீரனை அழைத்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். அரை கிலோமீட்டர் தூரம் வரை ஓடிச்சென்ற மோப்பநாய் திரும்ப அவரது வீட்டிற்கே வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை எஸ்பி. வந்திதா பாண்டே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு நேரில் வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.