கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு தடகளப்போட்டிகளில் பதக்கங்களை வாரி வாரி குவித்த மாணவி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பர்கூர் தாலுகாவில் சூளாமலை ஊராட்சி மேல் கொட்டாய் கிராமத்தில் சகாதேவன் என்பவரின் மனைவி லட்சுமி . இருவருக்கும் 17 வயதான மஞ்சு என்ற மகனும் 14 வயதில் சத்யா என்ற மகளும் இருந்தார்கள். சத்யா சூளாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் 5 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே தடகளப்போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மாவட்டம் , மாநிலம் என அதிக போட்டிகளில் பங்கேற்று அடுத்தடுத்த தங்கப்பதக்கங்களை வென்றார். 42 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றிருக்கின்றார். 2018ல் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மாநில அளவில் ஏழாம் இடம் பிடித்தார். மாவட்ட அளவில் 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாரி குவித்திருக்கின்றார்.
கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் முதுகில் வலி ஏற்பட்டது. இதனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது முதுகு தண்டுவடத்தில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதை பயோ ஸ்பை செய்து பார்த்த மருத்துவர்கள் புற்றுநோய் கட்டி என கூறியதால் குடும்பமே நிலைகுலைந்து போனது.
புற்று நோய் சிகிச்சைக்கு மிகவும் பெயர் பெற்றது அடையாறு புற்று நோய் மையம். அங்கு சென்று புற்றுநோய்க்கட்டியை அகற்றினர். பின்னர் அவருக்கு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் முதுகுவலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அதே அடையாறு மருத்துவமனைக்கு சென்றபோதுதான் தெரியவந்தது அதே இடத்தில் மீண்டும் கட்டி வந்திருப்பது.
சத்யாவுக்கு இந்த புற்றுநோயின் தீவிரம் மூன்றாவது நிலையை எட்டிவிட்டது. மருத்துவ செலவிற்கு 30 லட்சம் ரூபாய் ஆகும் என கூறப்பட்டது. 5 லட்ச் ரூபாய் கட்டினால் 20 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும் என தெரிவித்த நிலையில் நிலத்தை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கட்டிய சகாதேவன் , தன் மகளை மருத்துவத்துறையினர் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி தனியார் நிறுவனம் முழு செலவையும் ஏற்று சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். உடல் நலம் மோசமடைந்ததை அடுத்து இவர் உயிரிழந்தார். இதனால்அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.