பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது.

உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், அதனை பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உஷாராணி (சார் பதிவாளர்) என்பவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார். எனவே, அந்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அது குறித்த அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார்? அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறினர். மேலும், தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் (IG) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்.22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.