திருச்சி எஸ்பிஐ காலனியில் இன்று புதிய டென்னிஸ் அரங்கத்தை திறந்து வைப்பதற்காக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு வருகை புரிந்து இருந்தார். அப்போது டென்னிஸ் அரங்க திறப்பு விழாவிற்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை சேதப்படுத்திவிட்டு அதன் பிறகு இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கியதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் அமைச்சர் கே.என் நேருவின் காரை வழிமுறைத்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.