சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்களிடம் பணிபுரியும் எந்தவொரு ஊழியரும் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டாலோ, தன் துணையை விவாகரத்து செய்தாலோ பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அதிரடியான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
சீனாவின் Zhejiang-ஐ தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனம் கணவன்-மனைவி இடையே நேர்மை மற்றும் விசுவாசத்தின் கலாச்சாரத்தை உறுதி செய்வதற்காக, தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய விதிகளை கடந்த ஜூன் 9ஆம் தேதி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த விதியின் கீழ், எந்தவொரு ஊழியரும் திருமணத்திற்குப் புறம்பான உறவுவில் ஈடுபடக்கூடாது. அதே போல் மனைவியோ, கணவரோ எந்த ஒரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு திருமணமான அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெளிவுபடுத்தியுள்ள அந்நிறுவனம், உள் நிர்வாகத்தை வலுப்படுத்த ஊழியர் குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பது அவசியம் என்றும், சிறந்த குடும்ப உறவுகள் நிறுவனத்தின் வேலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தங்கள் நம்புவதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, ஊழியர்களுக்கு கடுமையான விதிமுறைகள் குறித்த தகவல்களை வழங்கிய பின்னர், இதன் மூலம் அனைத்து ஊழியர்களும் குடும்பத்தில் தங்கள் துணையுடன் நல்ல நடத்தையைத் பின்பற்றி, நல்ல ஊழியர்களாக இருக்க முயற்சிப்பார்கள் என்று தங்கள் நம்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த சீன நிறுவனத்தின் புதிய விதிமுறைகள் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு, கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.