ராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 259 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் RS மங்களம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல் பாம்பு கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு சிகிச்சைகளை RS மங்களம் துணை சுகாதார நிலையத்தில் தான் பெற்று வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடம் தற்பொழுது பலவீனமாக காணப்படுகிறது. இப்போது மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய செவிலியர்கள் மருத்துவமனைக்கு வர அஞ்சுகின்றனர். இதனால் துணை சுகாதார நிலையம் பூட்டியே வைக்கும் அவலநிலையை உள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு திருவாடனை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைய உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பகுதியில் இருக்கக்கூடிய துணை சுகாதார நிலையத்தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அடங்கிய அமரவும் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேதமடைந்த கட்டிட புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை பார்த்த நீதிபதிகள் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் இந்த நிலையா? இது போன்ற கட்டிடங்களில் சுகாதாரத்துறை மருத்துவர்கள், அதிகாரிகள் குடியிருப்பீர்களா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின்போது நீதிபதிக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆய்வின் அறிக்கையை நீதிபதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். தொடர்ந்து, சுகாதாரத்துறை சார்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கட்டிடம் எப்போது இடிக்கப்படும்? கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அறிக்கைகள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.