ஒரு மனிதரின் வளர்ச்சியிலும் சிந்தனைப் போக்கிலும் குடும்பம் எனும் அமைப்புக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என சக உறவுகளிடமிருந்து பெற்றதும் கொடுப்பதும் ஏராளம். ஆனால், குடும்ப அமைப்பு மிகவும் சுருங்கிவிட்டது. தனிக்குடித்தனம் என்பதெல்லாம் மிக இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் சூழலும் உருவாகிவிட்டது. கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், பொருளாதார சுமை உள்ளிட்ட பல காரணங்கள் ஒற்றைக் குழந்தை எனும் முடிவை நோக்கி அந்தத் தம்பதியைத் தள்ளுகின்றன.
குடும்பத்தின் முழு கவனமும் ஒரு குழந்தை மீது குவிவதால், அவர்கள் சில விஷயங்களில் மற்றவர்களை விட முன்னணியில் இருக்க வாய்ப்புள்ளது. ஒற்றைக் குழந்தைகள் பெரும்பாலும் மற்றவர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் தங்களது தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். சமைப்பது முதல் சிறிய வேலைகளை செய்வது வரை அனைத்திலும் அவர்கள் சுயசார்புடையவர்களாக இருக்கிறார்கள்.
இது உணர்ச்சி ரீதியான ஆதரவிற்கும் பொருந்தும். அவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளவும், அதற்கான பொறுப்பை ஏற்கவும் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களின் உதவியை நாடாமல் முடிவெடுக்கும் திறனும் அவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது.
சிறு வயதிலிருந்தே ஒற்றை குழந்தைகள் கடினமான சூழ்நிலைகளை தனியாக சமாளிக்க வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு மன வலிமையையும், எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொண்டு மீண்டு வரும் திறனையும் வழங்குகிறது. வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் தடைகளை தகவமைத்து கடக்க வேண்டிய கட்டாயம் அவர்களின் மன உறுதியை மேலும் பலப்படுத்துகிறது.
தனியாக வளர்ந்தவர்களுக்கு சுதந்திர உணர்வு அதிகம் இருக்கும். அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி செயல்படவும், தங்களது இலக்குகளை அடையவும் இது உதவுகிறது. இளம் வயதிலேயே பணத்தை நிர்வகிக்கும் திறனும் அவர்களுக்கு வந்துவிடுகிறது. தங்களது நேரத்தையும், வளங்களையும் எப்படி பயன்படுத்துவது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.
ஒற்றை குழந்தைகள் தங்களது குடும்பம் சிறியதாக இருப்பதால், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆழமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உறவுகள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நட்பு, காதல் அல்லது தொழில்முறை உறவாக இருந்தாலும், அவர்கள் நேர்மையான மற்றும் உண்மையான உறவுகளுக்கு அதிக மதிப்பளிக்கிறார்கள்.
தனியாக வளர்வதால் சில சமயங்களில் தனிமை உணர வாய்ப்பு இருந்தாலும், அது அவர்களுக்கு அமைதியையும், தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த தனிமை சிலருக்கு வலிமையாக இருந்தாலும், பெரும்பாலான குழந்தைகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளவும், தனிமையில் மகிழ்ச்சியாக இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.
இவர்கள் எந்த ஒரு சூழ்நிலைக்கும் எளிதில் தகவமைத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருப்பார்கள். சூழ்நிலைகள் அவர்களை நெகிழ்வானவர்களாக ஆக்குகின்றன. புதிய சூழல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு முன்னேறும் திறன் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
Readmore: வெந்தைய தண்ணீர் குடித்தால் சர்க்கரை நோய் வராதா..? செலவே இல்லாத இந்த சிகிச்சை பற்றி தெரிஞ்சுக்கோங்க..