வானிலை மாறியுள்ளது. பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. வெப்பநிலை உயர்ந்து வருவதால், பல வீடுகளில் ஏசி (AC) பயன்பாடு தொடங்கியுள்ளது. இருப்பினும், உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்து, நீங்கள் ஏசி பயன்படுத்துபவராக இருந்தால், பல விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையெனில், தீவிர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் ஏசி அறையில் உறங்கும்போது, சில முக்கிய விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையிலான சில தவறுகளைச் செய்கின்றனர். உங்கள் வீட்டிலும் குழந்தைகள் இருந்து, நீங்கள் ஏசி பயன்படுத்திக்கொண்டிருந்தால், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும், அது தொடர்பான பிற விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் குழந்தை நலத்துறையில் பணியாற்றும் டாக்டர் ஹிமான்ஷு பதானி இதுகுறித்து பேசிய போது “உங்கள் வீட்டில் உள்ள குழந்தையின் அறையில் நீங்கள் ஏசி பயன்படுத்துகிறீர்கள் என்றால், அங்கு சரியான வெப்பநிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏசியின் வெப்பநிலை சுமார் 23 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருக்க வேண்டும்.
எந்தப் பருவ காலமாக இருந்தாலும் சரி, வெப்பநிலையை மிகக் குறைவாக வைப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். இது இருமல், சளி அல்லது ஒவ்வாமை (Allergies) போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், ஏசியிலிருந்து வரும் காற்று நேரடியாகக் குழந்தையின் மீது படாமல் பார்த்துக்கொள்வதும் மிக அவசியம். காற்று நேரடியாகக் குழந்தையின் மீது படுவது அவர்களின் சருமத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.” என்று தெரிவித்தார்..
ஏசி அறையிலும் குழந்தைகளைத் தகுந்தவாறு ஆடையணியுங்கள்.
ஏசி அறையில் இருக்கும்போதும் குழந்தைகள் முறையாக ஆடையணிந்திருக்க வேண்டும் என்று டாக்டர் ஹிமான்ஷு விளக்குகிறார். குழந்தைகளின் உடலை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அவர்களுக்கு அணியச் செய்ய வேண்டும். அதே சமயம், அளவுக்கு அதிகமான ஆடைகளை அணிவிக்கக் கூடாது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்..
ஏனெனில், அதிகப்படியான ஆடைகள் உடல் வெப்பநிலையை உயர்த்திவிடும், இதனால் ஏசி அறையின் வெளிப்புறச் சூழல் மிகவும் குளிராக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தை உருவாக்குகிறது. குழந்தைகள் அணியும் ஆடைகள் மெல்லியதாகவும், உடலை மட்டும் மூடும் வகையிலும் இருக்க வேண்டும். மேலும், ஏசியைத் தொடர்ந்து இடைவேளையின்றி இயக்கிக்கொண்டே இருக்கக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கும் ஒருமுறை, ஏசியை சிறிது நேரம் அணைத்துவிட்டு, அரை மணி நேரம் கழித்து மீண்டும் இயக்க வேண்டும்.
இத்தகைய குழந்தைகளை ஏசி அறையில் உறங்க வைப்பதற்கு முன் மருத்துவரை அணுகவும்.
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள்
சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள்
தீவிரமான தோல் நோய்கள் உள்ளவர்கள்
சமீபத்தில் ஏதேனும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
மேற்கூறிய வகையை சேர்ந்த குழந்தைகளை ஏசி அறையில் உறங்க அனுமதிக்கக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது அவர்களுக்குப் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்களோ அல்லது உடல்நலம் சார்ந்த சிக்கல்களோ இருந்தால், ஒரு மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.



