தமிழக அரசின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து, தற்போது ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், மாநிலத்தின் வரி வருவாய் அதிகரித்திருந்தாலும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நிதி மேலாண்மை பற்றிய வெள்ளை அறிக்கையிலேயே, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் அளவு இருமடங்காக உயர்ந்து ரூ10 லட்சம் கோடியாக உள்ளதாக தெரிவித்தார். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சொந்த வரி வருவாயின் பங்களிப்பு, வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகிய முக்கியக் குறியீடுகளில், நாட்டின் பிற முன்னணி மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக கூறினார்.
மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் பெரும்பகுதி, வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதற்கும், தவிர்க்க முடியாத பொறுப்பேற்றுக்கொண்ட செலவினங்களுக்கும் (Committed Expenditure) சென்றுவிடுவதால், புதிய நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் மிக குறைவாகவே உள்ளது என்றும் இத்தகைய கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், மக்கள் அரசாகத் தங்களது தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும், அதேவேளையில் மாநிலத்தைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீட்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “மாநிலத்தின் நிதி நிர்வாகத்தை முழுமையாகச் சீரமைத்துச் சரியான பாதைக்குக் கொண்டுவரக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும். குறுகிய கால அரசியல் லாபங்களை எதிர்பார்க்காமல், அடுத்த 15 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்களை நமது அரசு முன்னெடுத்து வருகிறது” என குறிப்பிட்டார். மேலும், 2026-27 நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.57,775 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை ஸ்திரத்தன்மையற்று இருப்பதாக கூறிய நிதியமைச்சர், 2026-27 பட்ஜெட் மதிப்பீடுகளின்படி மாநில அரசின் மொத்தக் கடன் ரூ.10.98 லட்சம் கோடியாக உயரும் என கணித்துள்ளார். வரவிருக்கும் 2026-27 நிதியாண்டில் மட்டும் அரசு சார்பில் ரூ.1,07,445 கோடி புதிதாக கடன் பெறவும், பழைய கடன்களுக்காக ரூ.51,971 கோடியை திருப்பிச் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தனது உரையில் நிதியமைச்சர் மரிய வில்சன் கூறினார்.
Read More : சாய் பல்லவிக்கு சீதை வாய்ப்பு எப்படி கிடைத்தது?… பல மாத சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீநிதி ஷெட்டி!



